இசீக்கா தீநுண்மம் (Zika virus, ZIKV) அல்லது ஜிகா வைரஸ் ஃபிளாவி தீநுண்மப் பேரினத்தின் ஃபிளாவிவிரிடே தீநுண்மக் குடும்பத்தைச் சேர்ந்த நச்சுயிரி ஆகும்; இதனை ஏடீசுக் கொசுவினக் கொசுக்கள் பரப்புகின்றன. மனிதர்களில், இது இசீக்கா காய்ச்சல் என்ற மிதமான நோயை உருவாக்குகின்றன. இந்த நோய் 1950களிலிருந்து ஆப்பிரிக்கா முதல் ஆசியா வரையான குறுகிய நிலநடுகோட்டு மண்டலத்தில் ஏற்பட்டு வந்தது. 2014இல் இந்த தீநுண்மம் கிழக்குநோக்கி பரவி அமைதிப் பெருங்கடலின் பிரெஞ்சு பொலினீசியாவிற்கும், பின்னர் ஈஸ்டர் தீவுக்கும் பரவியது. 2015இல் மத்திய அமெரிக்கா, கரீபியன் மற்றும் தென் அமெரிக்காவிற்கு பரவியது. தற்போது இது உலகம் பரவும் நோயாக கருதப்படுகின்றது.[1] இந்தக் காய்ச்சல் மிதமான டெங்குக் காய்ச்சல் போன்றுள்ளது.[2] இது ஓய்வு மூலமே குணப்படுத்தப்படுகின்றது;[3] இந்நோய்க்கு மருந்துகளோ தடுப்பு மருந்துகளோ இல்லை.[3] இசீக்கா நோய் பூச்சிவழிப் பரவும் ஃபிளாவி தீநுண்மங்களால் ஏற்படும் மஞ்சள் காய்ச்சலுடனும் மேற்கு நைல் நோயுடனும் தொடர்புடையது.[2] இசீக்கா நோயுற்ற கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு குறுந்தலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தற்போது கருதப்படுகின்றது.[4][5] சனவரி 2016இல் ஐக்கிய அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பயணம் செல்வது குறித்த எச்சரிக்கையையும் எடுத்துக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கர்ப்பிணிப் பெண்களுக்கான அறிவுரைகளையும் வெளியிட்டுள்ளன.[6][7] மற்ற அரசுகளும் நலவாழ்வு முகமைகளும் இதேபோன்ற பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன.[8][9][10][11] கொலொம்பியா, எக்குவடோர், எல் சால்வடோர், ஜமேக்கா மற்றும் பிரேசில் [12]போன்ற நாடுகள் இந்நோயால் ஏற்படும் தீவாய்ப்புகளைக் குறித்து முழுமையாக அறியப்படும் வரை கருவுறுவதை தள்ளிப்போடுமாறு அறிவுறுத்தி உள்ளன.[9][13]
இக்குடும்பத்தின் மற்ற தீநுண்மங்களைப் போலவே இசீக்கா தீநுண்மமும் உறை கொண்டுள்ள பிரிவுகளில்லா ஒரே இழை இருபதுமுக முக்கோணக நேர்மறை ரைபோ கருவமில மரபணுத்தொகுதி ஆகும். இது இசுபான்டுவெனி தீநுண்மக் கிளையின் இரு தீநுண்மங்களில் ஒன்றாகும்.[14][15]
இத்தீநுண்மம் முதன்முதலாக 1947இல் உகாண்டாவின் இசீக்கா காட்டில் செம்முகக் குரங்கு ஒன்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது; எனவேதான் இது இசீக்கா தீநுண்மம் என்று பெயரிடப்பட்டது. 1968இல் நைஜீரியாவில் முதன்முறையாக மனிதரிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.[16] 1951 முதல் 1981 வரை மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, எகிப்து, காபோன், சியேரா லியோனி, தன்சானியா, உகாண்டா நாடுகளில் மனிதருக்கு தொற்றியிருந்திருக்கக்கூடிய சான்றுகள் உள்ளன. தவிரவும் இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, தாய்லாந்து, வியட்நாம் போன்ற ஆசியப் பகுதிகளிலும் இருந்துள்ளது.[16]
நோய்தோன்றுவிதமாக நுழைந்தவிடத்திற்கு அருகிலுள்ள கிளையி உயிரணுக்களை தொற்றி பின்னர் நிணநீர்க்கணுக்களுக்கும் குருதியோட்டத்திலும் பரவுவதாக கருதுகோள் முன்வைக்கப்படுகின்றது.[14] ஃபிளாவி தீநுண்மங்கள் பொதுவாக திசுப் பாய்மத்தில் மறுவுருவாக்கம் பெறுகின்றன; ஆனால் இசீக்கா தீநுண்ம அயற்பொருட்கள் திசுவறை உட்கருவிலும் காணப்பட்டுள்ளன.[17]
இசீக்கா தீநுண்மம் ஒரு கடுமையான நரம்பியல் கோளாறுக்கு வழிவகுக்கும் என்றும், அதனால் பக்கவாதமும் உயிரிழப்பும்கூட ஏற்படலாம் என்றும் இந்த தீநுண்மத்தின் தாக்கம் தொடர்பில் தி லான்சட்டு மருத்துவமனையில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு கூறுகிறது.[18]
இசீக்கா தீநுண்மம் (Zika virus, ZIKV) அல்லது ஜிகா வைரஸ் ஃபிளாவி தீநுண்மப் பேரினத்தின் ஃபிளாவிவிரிடே தீநுண்மக் குடும்பத்தைச் சேர்ந்த நச்சுயிரி ஆகும்; இதனை ஏடீசுக் கொசுவினக் கொசுக்கள் பரப்புகின்றன. மனிதர்களில், இது இசீக்கா காய்ச்சல் என்ற மிதமான நோயை உருவாக்குகின்றன. இந்த நோய் 1950களிலிருந்து ஆப்பிரிக்கா முதல் ஆசியா வரையான குறுகிய நிலநடுகோட்டு மண்டலத்தில் ஏற்பட்டு வந்தது. 2014இல் இந்த தீநுண்மம் கிழக்குநோக்கி பரவி அமைதிப் பெருங்கடலின் பிரெஞ்சு பொலினீசியாவிற்கும், பின்னர் ஈஸ்டர் தீவுக்கும் பரவியது. 2015இல் மத்திய அமெரிக்கா, கரீபியன் மற்றும் தென் அமெரிக்காவிற்கு பரவியது. தற்போது இது உலகம் பரவும் நோயாக கருதப்படுகின்றது. இந்தக் காய்ச்சல் மிதமான டெங்குக் காய்ச்சல் போன்றுள்ளது. இது ஓய்வு மூலமே குணப்படுத்தப்படுகின்றது; இந்நோய்க்கு மருந்துகளோ தடுப்பு மருந்துகளோ இல்லை. இசீக்கா நோய் பூச்சிவழிப் பரவும் ஃபிளாவி தீநுண்மங்களால் ஏற்படும் மஞ்சள் காய்ச்சலுடனும் மேற்கு நைல் நோயுடனும் தொடர்புடையது. இசீக்கா நோயுற்ற கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு குறுந்தலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தற்போது கருதப்படுகின்றது. சனவரி 2016இல் ஐக்கிய அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பயணம் செல்வது குறித்த எச்சரிக்கையையும் எடுத்துக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கர்ப்பிணிப் பெண்களுக்கான அறிவுரைகளையும் வெளியிட்டுள்ளன. மற்ற அரசுகளும் நலவாழ்வு முகமைகளும் இதேபோன்ற பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன. கொலொம்பியா, எக்குவடோர், எல் சால்வடோர், ஜமேக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் இந்நோயால் ஏற்படும் தீவாய்ப்புகளைக் குறித்து முழுமையாக அறியப்படும் வரை கருவுறுவதை தள்ளிப்போடுமாறு அறிவுறுத்தி உள்ளன.