உகாய் (Salvadora persica), (Galenia asiatica, Salvadora indica, அராக், மிஸ்வாக்)[1][2] என்பது பெரும்பாலும் பற்சுகாதாரத்துக்காகப் பரிந்துரைக்கப்படும் ஒரு செடி.
உகாய் மரத்தின் காய் நெல்லைப் போல் நெல்லின் அளவினதாய் இருக்கும். அதன் நெற்று ஈரம் பட்டவுடன் வெடித்துச் சிதறும். இது மழையின் ஈர மண்ணில் காலூன்ற ஏற்றதாய் அமையும். இதனை இக்காலத்தில் அம்மாம் பச்சரிசிச் செடி என்பர்.
உகாய் மரம் சிறுநீரகக் கல்லுக்கு எதிரான தன்மையைக் கொண்டது.[3] முகம்மது நபியவர்கள் இதன் குச்சிகளையே பற்றூரிகையாகப் பயன்படுத்தியுள்ளார்கள். முஸ்லிம்களிற் பெரும்பாலானோர் இதனை இன்றளவிலும் பின்பற்றுகின்றனர். பல நூற்றாண்டுகளாகப் பற்தூரிகையாகப் பயன்படுத்தப்படும் இதனை உலக சுகாதார நிறுவனம் வாய்ச் சுகத்துக்கான சிறந்த பொருளாகப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறது. இதில் ஏராளமான மருந்துப் பொருட்கள் காணப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.[4][5][6][7][8][9]
இதன் காயிலிருந்து வெடித்து உதிரும் விதை மிளகைப்போல் காரம் உடையது. பறவைகள் உகாய் விதைகளை மேயும். உகாய் விதை பற்றிய சுவையான செய்தி ஒன்று நற்றிணை 66 எண்ணுள்ள பாடலில் வருகிறது. இதனைப் பாடிய புலவர் இனிசந்த நாகனார். உகாய் விதையை மேய்ந்த புறா ஒன்று அந்த விதையின் காரத்தால் துடித்ததாம். மரக்கிளையில் ஏறிக்கொண்டு உயவிற்றாம் (கத்திற்றாம்). அப்போது அதன் கழுத்து மயிர் சிலிர்த்துகொண்டதாம். கண் சிவந்துபோயிற்றாம். மறைவிடத்தில் ஒருவனோடு சேர்க்கை கொண்ட ஒருத்தி இப்படி உகாய் விதை உண்ட புறாவைப் போலத் துடித்தாளாம்.
பண்டைய தமிழர் இயற்கையை எவ்வாறெல்லாம் சுவைத்து அதனோடு ஒன்றியிருந்தனர் என்பதற்கு இது ஒரு சான்று.
சங்ககாலத்து ஊர்களில் ஒன்று உகாய்க்குடி. அவ்வூரில் வாழ்ந்த புலவர் உகாய்க்குடி கிழார். இவரது பாடல் குறுந்தொகைத் தொகுப்பில் பாடல் எண் 63 ஆக அமைந்துள்ளது.
உகாய் (Salvadora persica), (Galenia asiatica, Salvadora indica, அராக், மிஸ்வாக்) என்பது பெரும்பாலும் பற்சுகாதாரத்துக்காகப் பரிந்துரைக்கப்படும் ஒரு செடி.